Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில், தமிழக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் எழுதிய நூல்கள்

நவம்பர் 07, 2023 01:18

சார்ஜா: சார்ஜா 42 வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் தமிழக முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர் வைகைச் செல்வன் எழுதி  சென்னை, நூல் குடில் பதிப்பகம் வெளியிட்டுள்ள முனைவர் வைகைச் செல்வன் எழுதிய  'அங்கம் நிறைந்த சங்கம்' மற்றும் 'மறைந்த தலைவர்கள் மறையாத நினைவுகள்' ஆகிய இரண்டு நூல்களும் எழுத்தாளர் பேரவை  விழாவில் வெளியிடப்பட்டது. 

இந்த விழாவில் பதிப்பாளர் இராம.மெய்யப்பன் வரவேற்புரை நிகழ்த்தினார். 

'அங்கம் நிறைந்த சங்கம்'  நூலை ஆலியா முகம்மது நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.எம். ஷேக் தாவூத் வெளியிட மிமார் ஜூவல்லரி நிறுவன தலைவர் ஷேக்மைதீன், தங்கமும்,  'மறைந்த தலைவர்கள் மறையாத நினைவுகள்' நூலை தனியார் நிறுவன நிதித்துறை அதிகாரி நாகப்பன் வெளியிட அமெரிக்க பிரமுகர் ஜெகன்மோகன் நமச்சிவாயன் பெற்றுக் கொண்டார். 

அதனையடுத்து நூலாசிரியரும்,  தமிழக முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான முனைவர் வைகைச் செல்வன் ஏற்புரை மற்றும் சிறப்புரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் தனது உரையில் சார்ஜாவில் நடக்கும் சர்வதேச புத்தக கண்காட்சியில் எனது இரண்டு நூல்களும் வெளியிடப்படுவது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

இத்தகைய கலாச்சாரத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்துள்ள சார்ஜா ஆட்சியாளர் உள்ளிட்டோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த இரண்டு நூல்களும் தமிழகத்தின் பிரபல இதழ்களில் தொடராக வெளிவந்தது. அவை தொகுக்கப்படடு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. 
உலகில் பல்வேறு தொன்மையான மொழிகள் இருந்தாலும் அவற்றில் சில மொழிகள் தற்பொழுது எழுத்து வழக்கில் இல்லாமல் உள்ளது.

ஆனால் கீழடி அகழ்வாராய்ச்சி உறுதிப்படுத்தியுள்ள ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான செம்மொழியான தமிழ் மொழி இன்று பேச்சு மற்றும் எழுத்து வழக்கில் இருப்பது மிகவும் பெருமையளிக்கிறது. 

கடல் கடந்து பொருளாதார தேவைகளுக்காக 
அமீரகத்தில் இருந்து வரும் தமிழர்கள் தமிழ் மொழியின் சிறப்பை வெளிப்படுத்தி வருவது சிறப்பானது. சங்க இலக்கியத்தின் பெருமைகளை வெளிப்படுத்தும் வகையில் 'அங்கம் நிறைந்த சங்கம்' நூலும், எளிமையின் பிறப்பிடம் காமராஜர், நெஞ்சினிக்கும் நேயர் காயிதேமில்லத் முகம்மது இஸ்மாயில், வரலாற்று நாயகன் எம்.ஜி.ஆர்., அம்மா என்ற ஆளுமை ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் குறித்த 'மறைந்த தலைவர்கள் மறையாத நினைவுகள்' ஆகிய இரண்டு நூல்களும் இங்கு வெளியிடப்பட்டுள்ளது.

 இதனை அனைவரும் வாசித்து பயன்பெற வேண்டும் என்றார். 
இந்த விழாவில் அறிவியல் அறிஞர் எம்.ஜே. முகம்மது இக்பால், சர்புதீன், எஸ்.எஸ்.ஷாஜகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
ஷாஜகான் நன்றியுரை நிகழ்த்தினார்.

தலைப்புச்செய்திகள்